அஸ்ஸலாமு அலைக்கும்.
ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் நேரத்திலேயும்,
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேரத்திலேயும், அதில் எடுத்த மதிப்பெண்கள் பற்றியும்,
அதில் தேறிய தவறிய மாணவ மாணவிகள் பற்றியும், தேர்ச்சி சதவிகிதம் பற்றியும் ஒரே பரபரப்பாக
பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த வேளையில் நாம் நம்முடைய குழந்தைகளுக்கு சரியான முறையில்
கல்வியை வழங்குகிறோமா? நம்முடைய அடுத்த சந்ததிகளை சரியான முறையில் வழி நடத்துகிறோமா
என்று கேட்டால் பெரும்பாலான இடங்களில் அது நேருக்கு மாறாகவே இருக்கிறது. உண்மையான கல்வி
என்பது பொய்த்து போய் இன்று பலருக்கும் சங்கடம் தரும் கல்வியாகவே மாறி வருகிறது. இதற்கு
பெருகி வரும் கல்வி கூடங்களும், தன் மகனும் / மகளும் நல்ல மதிப்பெண் பெற்று நல்ல கல்லூரியில்
சேர வேண்டும் என்பது மட்டுமே காரணமாக இருக்கிறது. என்னது என் மகன் / மகள் நல்ல மதிப்பெண்
பெறுவது என்பது என் மகன் / மகளுக்கு செய்யும் துரோகமா? என்று நீங்கள் கேட்டால் பெரும்பாலான
இடங்களில் அது துரோகமாக தான் இருக்கிறது.
எப்படி? அதாவது நம் மாணவமனிகள் நல்ல மதிப்பெண்
எடுக்க வேண்டும் என்பது மட்டுமே நம்முடைய எண்ணம், அதில் தவறில்லை, ஆனால் அதற்காக அவர்களுடைய
கனவையும் வீணாக்க கூடாது. அவர்களை அழைத்து பேசுங்கள். உங்களுக்கு என்ன பிடிக்கும்,
பிடிக்காது. ஹாஸ்டலில் சேர்ந்தால் ஓகெவா? இல்லை எங்களுடன் தான் இருப்பாயா? என்று கேளுங்கள்.
பெரும்பாலான இடங்களில் பரஸ்பரம் இந்த பேச்சு பறிமாற்றங்கள் இல்லாத்துனாலே மாணவமனிகள்
தற்கொலை செய்து கொள்ளும் நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர். இன்னும் சில இடங்களில் மாணவமனிகள்
ஓரின சேர்க்கை, புகைப்பழக்கம், குடிப்பழக்கம் போன்ற பாரதூரமான கெட்ட பழக்க வழக்கங்களில்
சிக்கி கொள்கின்றனர். நீங்கள் சேர்க்கும் கல்வி நிலையங்கள் பல மாநில முதல் மதிப்பெண்கள்
பெற்ற பள்ளியாக இருக்கலாம், ஆனால் அதுவே உங்கள் குழந்தையின் உயிரை குடிக்கும் இடமாக
ஆகி விடக்கூடாது. நாமக்கல் மாவட்டத்தில் புற்றீசல் போல பரவி கிடக்கும் தனியார் பள்ளிகளில்
பணத்தை கொட்டி சேர்த்து விடுகின்றனர். ஆனால் அங்கோ மாணவர்கள் தனிமைப்படுத்த பட்டு,
வீட்டை விட்டு பிரிந்து எந்நேரமும் சதா படிப்பு சிந்தனையுடன் மன நிலை பாதிக்கப்பட்டவர்கள்
போல திரிகின்றனர்.
அதுவும், 9 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, +1, +2 என்றால் சொல்லவே
வேண்டாம். அவர்களுக்கு 100% தேர்ச்சி வேண்டும், மாநிலத்தில் முதல் மதிப்பெண் வேண்டும்
என்பதற்காக பிள்ளைகளை பிழிந்து எடுத்து விடுவர். பிள்ளைகளும் பெற்றோரிடம் சொல்லும்
போது அட்ஜஸ்ட் பண்ணிக்கோ என்று மாமியார் வீட்டிற்கு சென்ற மகளை பார்த்து சொல்வதை போல
சொன்னவுடன் அந்த பிள்ளைகளுக்கு என்ன செய்வதென்றே தெரியாது கண் பிதுங்குகின்றனர். டெயிலி
டெஸ்ட், ஹோம் ஒர்க், விளையாட்டுக்கு நோ என்று எந்த நேரமும் படிப்பு படிப்பு என்று மாணவர்களின்
மனநிலை விரக்தியாகி ஒரே பள்ளியில் 8 பிள்ளைகள் தற்கொலை செய்து கொண்டதாக என்னுடைய நண்பர்
சொன்னதும் ஷாக் ஆகி விட்டேன். இன்னொரு நாமக்கல் தனியார் தங்கி படிக்கும் பள்ளியில்
சேர்ந்து ஒரே வாரத்தில் மூன்று பிள்ளைகளுக்கு மேல் சொல்லாமல் பள்ளியை விட்டே ஓடி விட்டனர்.
இது அந்த பள்ளிகளுக்கு பெரிய விஷயமில்லை, ஏனெனில் அந்த பள்ளியில் ஒரு தடவை மாநிலத்தில்
முதல் மூன்று இடங்களுக்குள் வந்தால் அந்த பள்ளியின் நிலைமையே வேறு. விளம்பரங்களில்
மாநிலத்தில் முதல் மூன்று இடங்களில் வந்துள்ளது என்று சொல்லியே டொனேஷனை வாங்கி அவர்களுடைய
கல்லாவை நிரப்பி விடுவர். பிள்ளைகளை பெற்றவர்களும், படிப்பு சிலவுக்கு தானே;
இது முதலீடு
தான் என்று சேர்த்து வைத்த பணத்தையெல்லாம் பிள்ளைகள் மேல் முதலீடு செய்து பிள்ளைகளையும்
தன்னுடைய வியாபாரத்தில் ஒன்றாக கருதுகின்றனர். இப்படி வளர்க்கப்பட்ட பிள்ளைகள் பல வேலையில்
சேர்ந்தவுடன் திருமணமாகி மனைவியுடன் செட்டிலாகி பெற்றோர்களை கவனிக்க மறந்த கதைகளும்,
பெற்றோர்களுக்காக நல்ல வசதியான முதியோர் இல்லங்களை புக் செய்யும், பிள்ளைகளும் பெருகி
வருகின்றனர். சென்னையில் ஒரு தனியார் பள்ளியின் நிலைமையே வேறு. அங்கு சேர்த்தால் பிள்ளைகள்
ஈஸியாக கஞ்சா பழக்கத்துக்கு பாலாகி விடுவார்கள் என்று என் நண்பன் சொன்ன போது மனம் ஒடிந்து
போனேன். பிள்ளைகளை பெற்றோர் வெளிநாடுகளில் இருந்து கொண்டு பிள்ளைகளை இங்கு சேர்ந்து
படிக்க வைத்தால் பெற்றோர்களிடம் காசு வாங்கி கொண்டு கெட்ட பழக்கத்தை மட்டுமே கற்று
கொண்டு வெளியேறிய பிள்ளைகளும் உண்டு. களவும் கற்க மற என்பதை களவும் கற்று மற என்று
மாற்றியதில் இருந்தே தவறு செய்வதற்கு புதிய வடிகாலை தேடி விட்டோம்.
பணம் நமக்கு தேவை தான் ஆனால் அது மட்டுமே
தேவையில்லை. தவிர தனியார் பள்ளியில் படித்தால் தான் முதல் மதிப்பெண் வாங்க முடியும்
என்றோ அல்லது நன்றாக விளம்பரம் செய்யும் பள்ளிகளில் படித்தால் தன்னுடைய பிள்ளையும்
நல்ல மதிப்பெண் வாங்கும் என்றோ இருக்கும் உங்கள் முன்முடிவை உடனே மாற்றுங்கள். இரண்டு
வருடங்களுக்கு முன் பத்தாம் வகுப்பில் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்ற பெண் திருநெல்வேலியில்
உள்ள அரசு பள்ளியில் படித்தவர் தான், இது போல பல கதைகள் இருக்கு. நம் குழந்தைகள் நமக்கு
பணம் சம்பாதித்து மட்டும் தரும் மரங்கள் அல்ல. அப்படி நீங்கள் அவர்களை வளர்த்தால் பின்னால்
அவர்கள் பணத்தை மட்டுமே சம்பாதித்து கொண்டு உங்களை கவனிக்காமல் போக கூடும் (இது பல
இடங்களில் நடந்து கொண்டிருக்கிறது) பல இடங்களில் என்னை நீ ஹாஸ்டலில் போட்டு பழிவாங்கினாயே
நானும் உன்னை பழி வாங்குவேன் என்று எகிறிய கதைகளும் உண்டு.
உங்கள் குழந்தைகளை நீங்கள் தான் செதுக்க
வேண்டும். நீங்கள் சேர்க்கும் பள்ளிகள், கல்லூரிகளின் படிப்பு தரத்தை மட்டும் பார்க்காமல்
அங்கு சேர்த்தால் எப்படி பிள்ளைகள் வளரும், என்ன மாதிரியான பிரச்சனைகள் வரலாம் என்று
யோசித்து சேருங்கள். குறிப்பாக விடுதியில் சேர்க்கும் பிள்ளைகளின் எண்ண ஓட்டங்களை அறிந்து
கொள்ளுங்கள்.
நாமக்கல் மாவட்ட பள்ளிகளை பற்றிய சிற்ற்ற்ற்றப்பு
பார்வை இந்த சுட்டியில் இருக்கிறது,
பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
http://tamil.oneindia.in/news/tamilnadu/erode-goes-highest-percentage-pass-out-200468.html
குறிப்பு : சென்னை, நாமக்கல் மாவட்ட பள்ளிகளை
மட்டுமே குறி வைத்து இந்த கட்டுரையை எழுதவில்லை. இன்னும் இது போல் எல்லா மாவட்டங்களிலும்
நடக்கிறது. பிள்ளைகளிடம் பழகும் நண்பர்கள் போல பழகுங்கள். தவறு செய்தால் மட்டும் பெற்றோர்களாக
இருங்கள்
...தொடரும்
தோழமையுடன்
அபு நிஹான்
No comments:
Post a Comment
உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்