அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் யாதொரு காரியத்தை முடிவெடுத்து விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் சுயமாக வேறு அபிப்ராயம் கொள்வதற்கு, விசுவாசியான எந்த ஆணுக்கும், எந்த பெண்ணுக்கும் உரிமையில்லை. (அதில்) அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் எவர் மாறு செய்கிறாரோ அவர், பகிரங்கமான வழிகேடாக திட்டமாக வழி கெட்டுவிட்டார். (அல்குர்ஆன்:33:36)
இந்த ஒரு அத்தியாயம் மட்டுமே போதும், மார்க்கத்தின் உரிமை அல்லாஹ்விற்கே உரியது என்று சொல்வதற்கு. இறைவனுடைய சொல்லையே வாழ்க்கையாக வாழ்ந்து காட்டிய நபி (ஸல்) அவர்களுக்கே மார்க்கத்தின் சட்டங்களை இயற்றும் அதிகாரத்தை அல்லாஹ் கொடுக்கவில்லை என்றால், இன்று மவ்லவிகள், இமாம்கள், ஷெய்குமார்கள் என்று சொல்லக் கூடியவர்களுக்கு குர்ஆன் ஹதீஸ் ஒளியில்லாமல் மார்க்கத்தின் அதிகாரத்தில் கை வைக்க, மார்க்கத்தில் புதிதாக ஒரு விஷயத்தை இபாதத் என்று சொல்லவோ அல்லது மார்க்கத்தில் சொல்லப்பட்ட இபாதத்களை நீக்கவோ, திருத்தம் செய்யவோ என்ன அதிகாரம் இருக்க முடியும்.
எத்தனையோ விஷயங்களில் குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக இருந்தாலும் இமாம்களின் பெயரால், மவ்லவிகளின் பெயரால், 7 வருடம் ஓதியவர்கள் என்ற பெயரால் எவ்வளவு அனாச்சாரங்களை நாம் நித்தம் நம் வாழ்க்கையில் செய்து கொண்டிருக்கிறோம். ஒரு விஷயம் இபாதத் என்று முடிவு செய்வதற்கு அதிகம் தகுதியானவன் அல்லாஹ். அவன் அல்லாது அவனுடைய திருத்தூதருக்கே தனிப்பட்ட முறையில் அல்லாஹ்விடமிருந்து வஹி வராமல் எதையும் இபாதத் என்றோ அல்லது மார்க்கம் என்றோ முடிவு செய்ய அனுமதி இல்லை.
நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்படாத அதிகாரம்
“லவ்லாக லமா கலக்துல் அஃப்லாக்” – உம்மைப் படைக்கும் நோக்கமில்லாது இருந்தால் இந்த உலகையே படைத்திருக்க மாட்டேன்”. (ஹதீஸ் குத்ஸி) என இறைவனே நபி பெருமானாரை சிறப்பித்துக் கூறியுள்ளான்.
அப்படி சிறப்பு வாய்ந்த நபிக்கே மார்க்கத்தில் சொந்த கருத்தைக் கூற அனுமதி இல்லை என்னும் பட்சத்தில் நான்கு இமாம்களுக்கு/ மவ்லவிகளுக்கு / ஷெய்குமார்களுக்கு எப்படி அனுமதி/அதிகாரம் இருக்க முடியும். நான்கு இமாம்களுக்கு/ மவ்லவிகளுக்கு/ ஷெகுமார்களுக்கு அனுமதி / அதிகாரம் இல்லை என்று சொன்னால் இமாம்களை கண்ணியக் குறைவாக பேசுகிறோம் என்று சிலர் கூறுகின்றனர். நபி(ஸல்) அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் மார்க்கத்தில் சட்டம் இயற்ற அனுமதி அளிக்கப்படவில்லை என்று சொன்னால் நபி (ஸல்) அவர்களை கண்ணியக் குறைவாக பேசுகிறோம் என்று யாராலும் சொல்ல முடியாது, சொல்லவும் கூடாது. ஏனெனில் அல்லாஹ்வே நபி(ஸல்) அவர்களை தனிப்பட்ட முறையில் தன்னிடம் இருந்து வஹி வராமல் மார்க்க அதிகாரத்தில் முடிவு எடுக்கக் கூடாது என்று கூறியிருக்கிறான்.
இதற்கு சான்றாக நிறைய சம்பவங்கள் இஸ்லாமிய வரலாற்றில் உள்ளது.