அனுபவம் இல்லாத தொழிலை செய்ய கூடாது:
அனுபவம் இல்லாத வேலையை ஆரம்பிக்க கூடாது. உதாரணத்திற்கு நீங்கள் ஹோட்டல் வைத்தால் உங்களுக்கு புரோட்டாவும் போடத் தெரிய வேண்டும், டீயும் போடத் தெரிய வேண்டும். டீ / புரொட்டா மாஸ்டர் வரவில்லையென்றால் களத்தில் இறங்கி வேலை செய்வதற்கு கேவலமாக எண்ணவும் கூடாது. இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால் டீ / புரோட்டா மாஸ்டர்களிடம் கடினமாக நடந்து கொண்டால் / அல்லது அவர்கள் திடீரென்று நோய்வாய்பட்டால் நாம் வேலை செய்ய கற்றிருந்தால் தான் அன்று கடை திறந்திருக்கும். இல்லையேல் கடையை அடைத்து விட்டு வீட்டில் தான் உட்கார்ந்து இருக்க வேண்டும். உங்களுக்கு ஒரு தொழில் செய்ய ஆசையாக இருக்கிறது, ஆனால் உங்களுக்கு அதில் அனுபவம் இல்லையென்றால் சென்னை போன்ற நகரங்களில் அந்த தொழில் செய்யும் கூடத்தில் ஒரு 6 மாதம் வேலை செய்து தொழிலை கற்று கொண்டு, நெளிவு சுளிவுகளை தெரிந்து கொண்டு தொழிலை ஆரம்பிப்பது நல்லது. இன்று பலர் தொழிலாளிகளை நம்பி தொழிலை ஆரம்பிக்கின்றனர், ஆனால் அந்த நம்பிக்கைக்குரிய தொழிலாளி தன்னுடைய கடையை விட்டு போனவுடன் செய்வதறியாது திகைக்கின்றனர்.







