Saturday 16 October 2010

தாய் என்பவள் …

தாய்
நம் வாழ்க்கையில் மிக முக்கியமான பருவம் குழந்தை பருவம். அந்த குழந்தைப் பருவத்தில் மிக முக்கிய பங்காற்றக் கூடியவர்கள் பெற்றோர்கள். தாயிடத்தில் அன்பையும் தந்தையிடத்தில் அறிவையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று எல்லோரும் சொல்வார்கள். ஆனால் சிலருக்கு தந்தையிடமே இரண்டும் கிடைக்கும். சிலருக்கு எதிர்மறையாக கிடைக்கும். ஆனால் எங்கள் வீட்டை பொருத்தவரை என்னுடைய தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வந்ததால் தந்தையிடமிருந்து பெற வேண்டிய அறிவும் தாயிடமிருந்தே கிடைத்தது. தந்தை வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் வந்தாலும் அவரிடம் பேசுவதற்கே எங்களுக்கு பயமாக இருக்கும். ஆனால் எங்களுடன் இருக்கும் போது பல விஷயங்கள் மலேசியாவை பற்றி சொல்லுவார்கள், மலாய் மக்களின் பாரம்பரியம், உணவு முறைகள், அவர்களின் கலாச்சாரம் என்று எங்களுடைய அறிவுத் தேவையை பூர்த்தி செய்வார்கள். இப்படி அவ்வப்போது எங்களுடைய அறிவுக்கு தீணியாக தந்தை இருந்த போதிலும், தாய் தான் எங்களை கூர்மையாக கவனித்து சிறு வயதில் தேவையானதை எங்களுக்கு சொல்லிக் கொடுத்து, பிறந்தது முதல் இப்போது வரை எங்களை சரியான முறையில் வழி நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால் மிகையாகாது. 
சிறு வயதில் எப்படி இருக்க வேண்டும் என்பதில் ஆரம்பித்து பதின்ம வயதில் எதிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும், எப்படிபட்ட நண்பர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும், வாலிப வயதில் யாரிடத்தில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும், வேலைக்கு செல்லும் போது உயரதிகாரியிடத்தில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றியும், மார்க்க விளக்கங்கள், தொழுகையின் முக்கியத்துவம், எங்களுடைய தலைவர் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு ஆகியவை பற்றியும் உலக நடப்புகள் பற்றியும் சொல்லிக் கொண்டே எங்களை பட்டை தீட்டிக் கொண்டே இருந்தார். 

நம்ம வீட்டில் நான் கடைக்குட்டியாக இருப்பதனால் ஸ்பெஷலாக செல்லம் கொஞ்சம் ஜாஸ்தி. மற்றபடி கண்டிப்பு அதிகமாக இருக்கத்தான் செய்தது. ஆனால் அப்படியும் கண்டிப்பாக என் தாய் இல்லாவிட்டால் நம்முடைய கதி என்னாயிருக்கும் என்று நமக்கே தெரியும்.(ஹி ஹி, சில சமயம் உண்மையை சொல்ல வேண்டி இருக்கிறது) 

சரியான பட்ஜெட்டில் குடும்பம் நடத்த என் தாயை விட வேறு ஆள் இல்லையென்று நான் சொல்லுவேன். அந்த அளவுக்கு வீன் விறயம் செய்யாமலும், திடீரென்று வரும் சிலவுகளை எதிர் கொள்ளும் உத்தியும், என்னை வியக்க வைத்தன. சில நேரங்களில் என் தாய் மிகவும் கருமித்தனம் செய்வது போல் நான் உணர்வேன், அதன் பிறகு தான் கருமித்தனத்துக்கும் சிக்கனத்துக்கும் வித்தியாசம் தெரிந்தது. அதயே என் வாழ்க்கையிலும் நான் செயல்படுத்துகிறேன். என்னுடைய நண்பர்களுக்கும் பணக்கஷ்டம், லோன் பிரச்சனை, மற்றும் கிரெடிட் கார்டு பிரச்சனை இருந்தால் சிக்கனத்தின் அவசியம் குறித்தும் வீண் விறயத்தின் ஆபத்து குறித்தும் விளக்குவேன். இதனாலேயே என்னுடைய அருமை நண்பர் என்னுடன் purchase வர மறுப்பார். இதையெல்லாம் கற்றுத்தந்த என் தாய் ஒரு சிறந்த பொருளாதார நிபுனர் என்பேன். 

திட்டம் தீட்டி அதில் வென்றெடுத்து தன் குடும்பத்திற்கும் குடும்ப அங்கத்தினருக்கும் என்ன தேவையென்பதை உணர்ந்து அதன்படி என் குடும்பத்தினரிடத்தில் கலந்தாலோசித்து அதை சீறிய முறையில் செயல்படுத்துவதில் வல்லவராகத் திகழ்வார் என் தாய். அது எங்களின் படிப்பு விஷயத்திலும் சரி, எங்களின் திருமண விஷயத்திலும் சரி, சொத்து வாங்குவது, விற்பது தொடர்பான விஷயத்திலும் சரி. ஆகையால் என் தாய் ஒர் சிறந்த நிர்வாக இயக்குனர் என்பேன். 

குடும்பத்தில் அவ்வப்போது நடக்கும் சிறு பிரச்சனைகள், அதனால் ஏற்படும் மனக்கசப்புகள், திடீர் இழப்புகள் என்று எதுவாயினும் அது நல்லதுக்கே என்று அப்போதே (நான் சிறு வயாதாகிருக்கும்போதே) ALL IS WELL- எல்லாம் நல்லதுக்கே என்ற பாலிசியை சொல்லிக் கொடுத்து எங்களுக்கு வாழ்வில் எதையும் தாங்கிக் கொள்ளும் உத்தியை கற்றுக் கொடுத்தார். ஆம் அவர் ஒரு சிறந்த ஆசிரியர் /வழிகாட்டி என்பேன். 

ஒழுக்கம் வாழ்வில் இன்றியமையாதது என்றும் கெட்ட பழக்கங்கள் மனிதனின் வாழ்க்கையை சீரழித்து விடும் என்றும் அழகான உதாரணங்களை சொல்லி எங்களை சிறந்த முறையில் வழிநடத்துவதில் வல்லவர் என் தாய் என்பேன். 

எப்படி உடை உடுத்துவது, எந்த நிறம் என்னை அழகாக காட்டும், எப்படி உடை உடுத்த வேண்டும் என்று அறிவுரைகள் கூறி எங்களை வழிநடத்துவார் என் தாய். அவர்கள் சொல்லிக் கொடுத்த விஷயத்தை நான் நடைமுறைப்படுத்தியதால் பல இடங்களில் எனக்கு பாராட்டுக்கள். ஆம் அறிவுரை சொல்வதில் என் நண்பனை மிஞ்சிவிட்டாள் என் தாய் என்பேன். 

பெற்றேடுத்ததிலிருந்து அல்லும் பகலும் எங்களுக்காகவே பாடுபட்டு இன்று எங்களுடைய வளர்ச்சியில் பெரிதும் சந்தோஷப்படுவதில் முதல் ஆள் என் தாய் என்பேன். பொதுவாக எங்களில் (சகோதர/சகோதரிகள்) யாருக்கேனும் உடல்நிலை சரியில்லையென்றால் அனைவரும் கவலைபடுவோம், ஆனால் அடுத்த நொடி மறந்திடுவோம். ஆனால் எங்கள் தாயாரின் நிலையோ வேறு: பெற்றெடுத்த பிள்ளைகளில் யாருக்கேனும் உடல்நிலை சரியில்லை என்றால் முதலில் வருத்தப்படுவதோடு அதைப்பற்றியே சதா சிந்தித்துக் கொண்டிருப்பதால் நான் சந்தித்த மனிதர்களிலேயே என் தாய் சிறந்தவள் என்பேன். ஒரு நாள் இரவு நான் காய்ச்சலில் கடும் வேதனைப்பட்டதால், அதிலிருந்து நான் பெரியவனாக ஆகும் வரை காய்ச்சலால் கஷ்டபட்டால், அந்த இரவு என் தாய் தூங்காமல் துடித்து விடுவாள். 

குறிப்பு: தந்தையை பற்றியும் சொல்ல நிறைய இருக்கிறது, இறைவன் நாடினால் அடுத்தடுத்த பதிவுகளில் கூறுகிறேன். 

டிஸ்கி: இந்த பதிவு எனக்கு ஒரு நல்ல தாயை கொடுத்த இறைவனுக்காக. 

தோழமையுடன் 
அபு நிஹான்

2 comments:

  1. //ஒழுக்கம் வாழ்வில் இன்றியமையாதது என்றும் கெட்ட பழக்கங்கள் மனிதனின் வாழ்க்கையை சீரழித்து விடும் என்றும் அழகான உதாரணங்களை சொல்லி எங்களை சிறந்த முறையில் வழிநடத்துவதில் வல்லவர் என் தாய் என்பேன். //

    super. good post. thanks for sharing.

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரர் மதுரை சரவணன் அவர்களே. தொடர்ந்து வாருங்கள்

    ReplyDelete

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...