Tuesday 7 February 2012

சீரியல்களா? சீரழிவுகளா?



நம் தமிழ்நாட்டு கலாச்சாரம் இன்று கொஞ்சம் கொஞ்சமாக சீரழிந்து வருவதை நாம் அறிகிறோம். கட்டிய கனவனை விட்டு மற்றவனோடு வாழும்/ ஓடும் பெண்களையும், கட்டிய பெண்டாட்டியை மதிக்காமல் திமிறாக ஓபனாகவே சின்ன வீடு வைத்துக் கொள்ளும் கனவன்மார்களையும் நாம் நித்தம் செய்தித்தாள்களில் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். இறுதியில் இது எங்கு போய் முடியுமா என்று பயப்படும் அளவிற்கு போய்விட்டது. 

அதிலும் திருமணமாகாத இளம்பெண்கள் கர்ப்பமாவதும், குழந்தை பெற்றுக் கொள்வதும் இன்று சர்வ சாதரணமாகி விட்டது (திருமணத்திற்கு முன்பு பாலுறவு வைத்துக் கொள்வதில் தவறு இல்லை என்று சொன்ன குஷ்புவை தான் வெளியில் விட்டுவிட்டார்களே). சமீபத்தில் பரவியிருக்கும் Living Together கலாச்சாரம் நம்முடைய இந்திய கலாச்சாரத்திற்கு ஒரு மணிமகுடம். திருமணமாகாத கல்லூரி பெண்கள் கர்ப்பமாவது என்ற காலம் தொடங்கி இப்போது பள்ளிப் பெண்களும் கர்ப்பமாகிக் கொண்டிருப்பது நம் அனைவரையும் நிலைகுலையச் செய்திருக்கிறது. 
  1. 2010 டிசம்பர் திங்கள் 24ஆம் நாள் மயிலாடுதுறை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகேஸ்வரி (வயது 13 வயதுகூட நிரம்பாத அந்தக் குழந்தைக்கு) ஓர் ஆண்குழந்தை பிறந்திருக்கிறது. பார்க்க  
  2. 2010 டிசம்பர் திங்கள் 30 ஆம் நாள் உளுந்தூர்பேட்டையில் அரசு மருத்துவமனை கழிவறையில் 12ம் வகுப்பு படித்து வரும் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேந்தமங்கலம் காலனியை சேர்ந்த உதயகுமார்-வளர்மதி தம்பதியின் மூத்த மகள் பரணிக்கு(17) ஆண் குழந்தை பிறந்தது. பார்க்க 
நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது – (அல் குர் ஆன் – 17:32) 

மேலே உள்ள சம்பவங்களை எல்லாம் பார்க்கும் போது இன்னும் நம் சமுதாயம் எந்த அளவிற்கு கலாச்சார சீர்கேடுகளை சந்திக்குமோ என்று எல்லோர் மனதிலும் கேள்வி எழுகிறது. இதை தடுப்பதற்கான வழிகளையும், இந்த தவறுகள் நடப்பதற்கான காரணிகளையும் ஆராய்ந்து நம்முடைய சமுதாய செல்வங்களுக்கு அறிவுரை கூறுவது நம் அனைவரின் மீதும் கட்டாயக் கடமையாக இருக்கிறது. பள்ளியில் படிக்கும் போதே காதல், கல்லூரியில் படிக்கும் போது காதல், இண்டெர்நெட்டில் காதல், மொபைல் போனில் காதல், டெலிபோனில் காதல், என்று எப்படி காதலிக்க வேண்டும், எப்படி அதற்காக நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை நமக்கு அன்று முதல் இன்று வரை சொல்லிக் கொடுக்கும் ஒரே ஆசான் பெரியத் திரை. தற்போது சின்னத் திரையும் அந்த லிஸ்டில் சேர்ந்து இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. 

பெரியத் திரை என்பது நாம் தேடித் தேடி பார்க்கும் திரைப்படங்கள் என்பதாலும், மூன்றே மணி நேரத்தில் முடிந்து விடுவதாலும் (சினிமாவும் நம் கலாச்சாரத்தை சீரழிக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது) இந்த கலாச்சார சீரழிவை செவ்வனே நம் வீட்டிற்கு கொண்டு வரும் சின்னத் திரை என்று சொல்லக்கூடிய சீரியல்களை பற்றி பார்ப்போம். 

தமிழ் மட்டுமல்லாது மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம், அரபி என்று கிட்டத்தட்ட எல்லா மொழிகளிலும் சீரியல்கள் எடுக்கப்பட்டு பலரால் பார்க்கப்பட்டு இன்று பல வீடுகளில் பஞ்சாயத்தாகி கொண்டிருக்கிறது. பல நெடுந்தொடர்கள் (மெகா தொடர்னா இங்கிலிஷாம் :) ) குடும்பங்களில் நடக்கும் பிரச்சனைகளை வைத்தே எடுக்கப்படுகின்றன. இந்த தொடர்கள் பெரிதும் வெற்றியடைய காரணமாக இருப்பது மிகவும் சிம்பிளான விஷயம். நம் வீட்டில் நடைபெறும் பிரச்சனைகள், நல்ல / கெட்ட காரியங்கள், அதில் வரும் சச்சரவுகள் போன்றவற்றை பற்றி அதிக தொடர்கள் எடுப்பதால் பெரும்பாலும் தமிழ் சகோதர சகோதரிகளுக்கு பிடித்து விடுகிறது. இது ஒரு புறம் இருக்க மாணவமணிகளையும் ஏன் விட்டு வைக்க வேண்டும் என்று எண்ணி அவர்களுக்காகவும் சீரியல் எடுக்க தொடங்கி விட்டனர் இந்த சீரியல் கில்லர்கள். கணா காணும் காலங்கள் என்று ஒரு சீரியல். அது இளைஞர்கள் எந்தளவுக்கு படிக்கும் வயதில் தைரியமாக முடுவெடுக்கிறார்கள், எப்படி ஆண் மாணவர்கள் பெண் மாணவர்களிடத்தில் பழகுகிறார்கள், எப்படி ஆசிரியர்களிடத்தில் மாணவர்கள் பழகுகிறார்கள் என்று அனுவனுவாக சொல்லியிருக்கிறார்கள். வாழ்க்கைக்கு தேவையான காதலை பற்றியும் அந்த சீரியலில், அதாவது அந்த வயதில் வரும் பருவ காதலை (a stage of infatuation) பற்றியும் சொல்ல தவறவில்லை. இதன் காரணமாக சில மாணவர்கள் தங்களையே அந்த சீரியலில் வரும் கதாநாயகர்களாக / கதாநாயகிகளாக, உதவும் நண்பனாக உருவகப்படுத்தி பார்த்ததன் விளைவு பல மாணவமணிகள் காதல் என்னும் பெயரால் வீட்டை விட்டு வெளியேறி அந்த சின்ன வயதில் திருமணம் முடித்துக் கொண்டு பெட்ரோல் பங்கிலும், ஆட்டோ ஓட்டியும் பிழைப்பு நடத்துவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது எங்கோ நடக்கிறது, நமக்கேன் வம்பு என்று நினைக்கின்ற கண்ணியவான்கள் தங்கள் வீட்டில் இதைப் போல் நடந்தால் தம் குடும்பத்தார்கள் கதி என்னெவென்று சற்று நிதானமாக சிந்தித்து பாருங்கள். 

சினிமா கொடுக்காத தாக்கத்தையா இந்த சீரியல் கொடுத்து விட்டது என்று கேள்வி கேட்போர் கவனத்திற்கு: சினிமா என்பதிலும் ஆபாசங்களும், அசிங்கங்களும் இருக்கத்தான் செய்கிறது, ஆனால் தினந்தோறும் நடக்கும் அன்றாட விஷயங்களை சீரியலில் காண்பிப்பதாலும், சினிமா போல் மூன்று மணி நேரத்தில் முடியாமல் வருடக்கணக்கில் நீட்டிக் கொண்டிருப்பதாலும் மாணவமணிகளின் படிப்பில் கவனம் சிதறுவதோடு அவர்கள் தவறான பாதையை தேர்ந்தெடுக்கவும் இதைப் போன்ற சீரியல்கள் காரணமாக அமைகின்றனர், 

இன்று எந்த வீட்டில் தொலைக்காட்சி பெட்டி இல்லையோ அந்த வீடு தான் பரம ஏழை வீடாக தெரிகிறது. தற்போது தலீவர் கலைஞரின் அரசியலால் எல்லார் வீட்டிலும் டிவி இருப்பது சீரியல் எடுப்பவர்களுக்கு ரொம்பவும் வசதியாகி போய்விட்டது. தொலைக்காட்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டு அதில் ஒளிபரப்படும் சீரியல்களை பார்ப்பதும் முக்கியமாகி போய்விட்டது. காலையில் 10:30 மணிக்கு ஆரம்பிக்கும் இந்த சீரியல்கள் இடையில் சிறிது இடைவெளி விட்டு மறுபடியும் 5:30 மணிக்கு ஆரம்பித்து இரவு 11:00 மணி வரை ஒளிபரப்படுகிறது. கிராம பகுதியில் வீட்டு வேலையை விரும்பி செய்யும் பெண்கள் கூட இப்போதெல்லாம் சீரியல் பிரியர்களாக மாறியிருப்பது மனதுக்கு வருத்தத்தை தருகிறது. இதனால் பெண்கள் தங்கள் பொழுதை உபயோகமாக கழிக்க பயன்படும் கூடை பின்னுதல், கைவினைப் பொருட்கள் செய்தல் போன்ற செயல்கள் இன்று கிராமப்புறங்களிலும் அறிதாகவே காணப்படுகிறது. 

அடுத்தவருடைய கணவனை கவருவது எப்படி, தன்னுடைய கணவருடைய சகோதரர்களின் மனைவிகளை (Co-sisters) எப்படி தங்கள் மாமியார் வீட்டை விட்டு துரத்துவது, தங்களுடைய மாமியாரிடத்தில் எப்படி நடந்து கொள்வது, தங்களுடைய கனவனை எப்படி தங்களின் கட்டுப்பாட்டிற்குள் வைப்பது, ஆண்கள் - எப்படி சின்ன வீடு வைத்து கொண்டு இரண்டு வீட்டையும் கவனித்து (MAINTAIN) கொள்வது, எப்படி கொலை செய்வது, எப்படி சட்ட சிக்கல்களை சமாளிப்பது, எப்படி புறம் பேசுவது, எப்படி கோல் மூட்டுவது, எப்படி பொய் சொல்லி தவறுகளில் இருந்து தப்பிப்பது, எப்படி கள்ள உறவுகள் வைத்துக் கொள்வது, அதை எப்படி மூடி மறைப்பது, எப்படி பழிவாங்குவது, அதற்காக எப்படி திட்டம் தீட்டுவது, எப்படி வார்த்தைகளால் சாகடிப்பது/ நோகடிப்பது என்று நம் குடும்பத்தில் நடக்கும் அத்துனை பிரச்சனகளுக்கும் காரணகர்த்தாவாக தொலைக்காட்சி சீரியல்கள் செயல்பட்டு வருகிறது எனலாம். இதில் உச்ச கட்டம் என்னெவென்றால் சினிமா மாதிரியே இதற்கு பாட்டும், ஹிரோ, ஹிரோயின், வில்லன் கதாப்பாத்திரங்கள், ஆபாச காட்சிகள் என எடுக்கப்படுவதால் சினிமா பார்ப்பதை விட மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் கருவியாக இன்று தொலைக்காட்சி சீரியல்கள் இயங்கிக் கொண்டிருப்பதை யாராலும் மறுக்க முடியாது. 

இவுங்க மாமியார் மெட்டி ஒலில வற்ற மாமியார் மாதிரியானவுங்க, எப்போதும் சண்டை போடுவாங்கலாம், அவ செல்வி மாதிரி ரொம்ப தைரியக்காரி, இவுங்க அப்பா _______ சீரியல்ல வற்ற அப்பா மாதிரி டம்மி அப்பாவாம் என்று உதாரணம் சொல்லி பேசிக் கொள்ளும் அளவிற்கு மிகவும் பிரபல்யமாகி விட்டது. இதையே பெரிய வெற்றியாக எண்ணி பாலசந்தர் போன்ற பெரிய சினிமா இயக்குனர்கள் கூட தற்போது சீரியல்கள் இயக்கி வருகிறார்கள். பெரியவர்களும் குழந்தைகளோடு சேர்ந்து பார்ப்பதால் குழந்தைகளை மட்டும் பார்க்காதே என்று சொல்ல முடியாத நிலையில் பெற்றோர்கள் இருக்கின்றனர். தேர்வு நேரத்திலும் இதே நிலை தொடர்வதால் பல வீடுகளில் மாணவமணிகள் தேர்வில் மண்ணை கவ்வுகின்றனர். 

இதனால் குடும்பத்தில் கூச்சல், குழப்பம், சண்டை, காழ்ப்புணர்ச்சி, பழிவாங்கும் எண்ணம், பண பேராசை என்று எல்லா கெட்ட பழக்கவழக்கங்களும் மனிதர்களிடத்தில் ஒருசேர வந்துவிடுகிறது. 

தொலைக்காட்சி பெட்டியை தொடர்ந்து பார்ப்பதால் ஏற்படும் நோய்களான பார்வை கோளாறு, மறதி, மூளையில் பல விதமான பிரச்சனை, உடல் பருமன், குடும்ப வாழ்க்கையில் நிம்மதியின்மை, தேவையற்ற மன உலைச்சல், ஹார்மோன் பிரச்சனைகள் போன்ற பல விதமான உடல் / மனம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதிகமாக டிவி பார்க்கும் குழந்தைகள் முரடராக வாய்ப்பு இருப்பதாக ஆய்வு கூறுகிறது. மேலும் குழந்தைகள் அதிக நேரம் டிவி பார்ப்பதால் பேச்சு திறன் குறைகிறது என்றும் ஆய்வில் தெரிகிறது.
kids watching tv
2010 ஆம் ஆண்டு மகளிர் தினத்தன்று சென்னையில் ஒரு விழாவில் பேசிய கனிமொழி அவர்கள் ''பெண்கள் 'டிவி'யில் சீரியல் பார்ப்பதில் கவனம் செலுத்துவதில் ஒரு பிரயோசனமும் ஏற்படாது,'' என்று கூறினார். 
 
மேலும் கணவனோ அல்லது தன்னுடைய மகனோ கஷ்டப்பட்டு உழைத்து வந்து சாப்பாடு வைக்க சொல்லி மனைவியிடமோ அல்லது தாயிடமோ சொன்னால், சீரியில் முடிந்தவுடன் தான் சாப்பாடு என்று சொல்ல கேட்டிருக்கிறேன். பல நேரங்களில் வெளிநாட்டிலிருந்து போன் செய்து குடும்ப விஷயங்களை விசாரிப்பதை காட்டிலும் சீரியல் விஷயங்களை விசாரிக்கும் ஆண்களை பார்க்கும் போது நாம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்று நன்றாக தெரிகிறது. ஆக சீரியல் மோகம் நம்முடைய சமுதாயத்தை சீரழித்து கொண்டிருக்கிறது என்று மட்டும் சொல்லிக் கொண்டிருப்பதோடு நிறுத்தி கொள்ளாமல் இதனால் ஏற்படும் விளைவுகளை மக்களிடம் எடுத்து சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதை இன்றே நம் வீட்டிலிருந்தே தொடங்குவோம். 

"இனி மனித இனத்தைச் சீர்படுத்துவதற்காக தோற்றுவிக்கப்பட்டிருக்கும் மிகச் சிறந்த சமூகத்தவராய் (கைரே உம்மத்) நீங்கள் இருக்கின்றீர்கள். நீங்கள் நன்மை புரியும்படி ஏவுகின்றீர்கள்; தீமையிலிருந்து தடுக்கின்றீர்கள். மேலும் அல்லாஹ்வின் நம்பிக்கை கொள்கின்றீர்கள்" (அல் குர்ஆன் 3:110) 

"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (அல் குர்ஆன் 13:11)

தோழமையுடன்
அபு நிஹான்

10 comments:

  1. அஸ்ஸலாமுஅலைக்கும்....
    என்றைக்கு சீரியல் வந்ததோ அன்றிலிருந்து திண்ணை பேச்சுக்கள் மறைந்தது கிராமங்களில்...பக்கத்துக்கு வீடுகளில் உள்ளவர்களிடம் கூட சீரியல் பார்க்கும் நேரங்களில் யரும் பேசுவதில்லை...


    விழிப்புணர்வு பதிவு...விழிக்குமா தாய்குலம்...

    ReplyDelete
  2. இம்புட்டு விளக்கமா பதிவு போட்டிருக்கீறதைப் பார்த்தா, இந்தப் பதிவுக்காகவே சீரியல்கள் பலவற்றைப் பார்த்து ஆராய்ச்சி பண்ணிருக்க மாதிரி இருக்கு??!! ;-))))))

    இதுக்கெல்லாம் சிம்பிளான தீர்வு ஒன்று இருக்கு!! கேபிளைக் கட் செய்வது!! ஆம், கேபிள் கனெக்‌ஷனைக் கட் செய்வதுதான். பொதிகை, மக்கள் டிவி போன்ற சேனல்கள் மட்டும் பார்க்கும்படி வசதி இருந்தால் செய்துகொள்ளலாம். (அதிலேயும் சீரியல் இருந்துச்சுன்னா, என்னைக் குத்தம் சொல்லக்கூடாது!!)

    அடிப்படையில், பெண்கள் இதில் நேரம் செலவழிக்கக் காரணம், நேரம் அதிகம் இருப்பதுதான்!! அந்த நேரத்தை நல்லவிதத்தில் செலவழிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும், அல்லது கற்றுக் கொடுக்க வேண்டும். புத்தகங்கள் நிறைய வாங்கிக் கொடுங்கள். வாசிக்கும் பழக்கம் வந்தால் வீட்டுக்கும், நாட்டுக்கும் நல்லது.

    இன்னொரு முக்கிய விஷயம் பார்த்தீர்களானால், சிறு/நடு வயது பெண்களைவிட மூத்த வயது பெண்களே (அம்மா, மாமியார் போன்ற) இதில் அதிகம் நேரம் செலவழிக்கின்றனர் (என்பது என் ஆய்வு ;-))) ). அதே காரணம்தான்!!

    யாருக்கானாலும், தீர்வு ஒன்றேதான் - disconnect it!!

    ReplyDelete
  3. சலாம் சகோ...

    //இதுக்கெல்லாம் சிம்பிளான தீர்வு ஒன்று இருக்கு!! கேபிளைக் கட் செய்வது!! ஆம், கேபிள் கனெக்‌ஷனைக் கட் செய்வதுதான். பொதிகை, மக்கள் டிவி போன்ற சேனல்கள் மட்டும் பார்க்கும்படி வசதி இருந்தால் செய்துகொள்ளலாம். (அதிலேயும் சீரியல் இருந்துச்சுன்னா, என்னைக் குத்தம் சொல்லக்கூடாது!!)//

    கட் பண்ணிட்டு நான் வந்த மறுவாரமே திரும்ப கேபிள் கனெக்ஷனை கொடுத்த என் மனைவிதான் ஞாபகம் வந்தது.

    சிறந்த பதிவை தந்தமைக்கு நன்றி சகோ ஹாஜா மைதீன்!

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும்!
    சீரியலை சீரியஸா பார்க்கிரவங்களுக்கு
    சிந்தனை சீரியஸா offஇல் இருக்கும்
    சிந்தனையை கொஞ்சம் swich on பண்ணாலே
    சீரியலும் சினிமாவும் பவர் கட் ஆகிடும்..

    ReplyDelete
  5. அலைக்கும் ஸலாம் சகோ அதிரடி ஹாஜா,

    உண்மை தான் திண்ணை பேச்சுக்கும், குழந்தைகளிடேயே விளையாட்டும் குறைந்து வீடியோ கேம் மற்றும் டிவி பார்ப்பது அதிகமாகி உள்ளது.

    //விழிப்புணர்வு பதிவு...விழிக்குமா தாய்குலம்...//

    கொண்டு செல்வோம்,எடுத்துரைப்போம். பதில் இறைவன் கையில்..

    ReplyDelete
  6. //இம்புட்டு விளக்கமா பதிவு போட்டிருக்கீறதைப் பார்த்தா, இந்தப் பதிவுக்காகவே சீரியல்கள் பலவற்றைப் பார்த்து ஆராய்ச்சி பண்ணிருக்க மாதிரி இருக்கு??!! ;-))))))//

    இல்லை சகோ, இதை பற்றி பல நேரங்களில் நண்பர்களிடம் விவாதித்ததுண்டு. இது முன்னமே எழுதிய பதிவு.

    //பொதிகை, மக்கள் டிவி போன்ற சேனல்கள் மட்டும் பார்க்கும்படி வசதி இருந்தால் செய்துகொள்ளலாம்//

    இது இந்தியாவில் சாத்தியம் இல்லாதது போல் தெரிகிறது.

    வாசிக்கும் பழக்கம் இல்லாது வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய நிறைய தொழில்கள் இருக்கின்றன. பொழுதும் உபயோகமாக போகும், அதே நேரத்தில் பணமும் சம்பாதிக்கலாம். இதை பணம் சம்பாதிக்கலாம் வாங்க பகுதியில் சொல்லி இருக்கின்றேன்.

    கேபிள் கனெக்ஷ்னை வெட்டி விடுவதால் சாதகமும், பாதகமும் ஏற்படும். நாம் நம் வீட்டாருக்கு சீரியல் பார்ப்பதால் ஏற்படும் விபரீதங்கள் குறித்து சொல்லி டிவி பார்க்க நேரம் ஒதுக்குங்கள் என்று விளக்கி National Geographic channel, Discovery channel, news, english news, மார்க்க நிகழ்ச்சிகள் போன்றவற்றை பார்க்க தூண்டலாம்.

    ReplyDelete
  7. அலைக்கும் ஸலாம்.

    //கட் பண்ணிட்டு நான் வந்த மறுவாரமே திரும்ப கேபிள் கனெக்ஷனை கொடுத்த என் மனைவிதான் ஞாபகம் வந்தது.//

    மறக்க முடியாத நினைவுகளா இருக்கும் போல சகோ.

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோ

    ReplyDelete
  8. சகோ zalha,

    அலைக்கும் ஸலாம்

    சிறப்பாக
    சிம்பிளாக
    சீரீய வண்ணம்
    சிந்தைக்குள் பதியும் வண்ணம்
    கருத்துகள் இட்டமைக்கு நன்றி.

    ReplyDelete
  9. நீங்கள் சொன்னது போல் என் மாமியார் அந்த சீரியல்ல வர மாமியார் போல, என் நாத்தனார் இன்னாரை போல் என சொல்லும் வழக்கம் வந்துவிட்டது!

    பல சீரியல்களில் ஆபாசம் குடிவந்தாகிவிட்டது... சென்சார் இல்லாததால் கொஞ்சம் அதிகமாகவே தடம் மாறிக்கொண்டிருக்கிறது :'(

    அருமையான எச்சரிக்கை கட்டுரை சகோ

    ReplyDelete

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...